ஒசூர் முதல் சிப்காட் ராஜேஸ்வரி லேஅவுட் வரை சாலை மிகவும் பழுதாகி வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளதால் உடனடியாக அந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என ஹோஸ்டியா சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அதன் தலைவர் வெற்றி.ஞானசேகரன் கூறியது.
ஒசூர் முதல் சிப்காட் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், 1000- க்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழிற்சாலைகளும் உள்ளன. குறிப்பாக உதிரி பாகங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் ராஜேஸ்வரி லேஅவுட் பகுதியில் அதிகம் உள்ளன.
இத்தொழிற்சாலைகளுக்கு தினமும் பல ஆயிரம் வாகனங்கள் வந்து செல்கின்றன. நமக்கு நாமே திட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இச் சாலை தற்போது மிகவும் சேதமடைந்து விட்டது.
எனவே, மாவட்ட நிர்வாகமும், சிப்காட் நிறுவனமும் இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். இந்தச் சாலையை பயன்படுத்தி தினமும் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று வருகின்றனர். கோவிந்த அக்ரஹாரம், பாகூர், பேகேப்பள்ளி, எழில் நகர் உள்ளிட்ட 6 கிராம மக்களும் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, துரிதகதியில் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.