தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறையால் இளநிலை பட்டு ஆய்வாளர் காலி பணியிடத்தை நிரப்பப்பட உள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பை சரிபார்த்துக் கொள்ளும்படி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அழைப்பு: தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறையால் 378 இளநிலை பட்டு ஆய்வாளர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான மாநில பதிவு மூப்பு அடிப்படையிலான ஒருங்கிணைந்த பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
இதற்கான வயது வரம்பு 1.7.2017 அன்று எஸ்சிஏ, எஸ்சி, எஸ்டி ஆகிய பிரிவினருக்கு 35, எம்பிசி, பி, பிசிஎம் ஆகிய பிரிவினருக்கு 35, பொதுப் பிரிவினருக்கு 30 வயது ஆகும். பிளஸ் 2 வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியினை உடையவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
மேலும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பட்டு வளர்ச்சியில் 6 மாத முன் அனுபவம் பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது ஒசூரில் செயல்படும் பட்டு வளர்ச்சி பயிற்சிப் பள்ளியில் 6 மாதம் படிப்பு முடித்து பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்த கல்வித்தகுதி மற்றும் வயது தகுதி உடைய பதிவுதாரர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு ஆக.16-ஆம் தேதிக்குள் நேரில் தங்களது பதிவினை சரிபார்த்துக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.