கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற இளைஞரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீஸார் கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணன்டஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், 2,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனம், ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், வழக்குப் பதிந்து வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் எல்.ஐ.சி. நகரைச் சேர்ந்த புங்கன் (30) என்பரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கர்நாடக மாநிலம், பங்காருபேட்டைக்கு ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.