கிருஷ்ணகிரி அருகே பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற ஆட்டோ ஓட்டுநரின் மனைவியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள தாளாப்பள்ளியைச் சேர்ந்தவர் முத்துசாமி(35). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சித்ரா(27). இந்த தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், முத்துசாமிக்கும், காமராஜ் நகரைச் சேர்ந்த வெண்ணிலா(30) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாம். இதுதொடர்பாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். இந்த நிலையில், வெண்ணிலாவின் வீட்டிற்குச் சென்ற சித்ரா, தனது கணவருடன் உள்ள உறவை துண்டித்துக் கொள்ளுமாறு கண்டித்தாராம்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சித்ரா, வெண்ணிலாவை கத்தியால் குத்தினாராம். காயமடைந்த வெண்ணிலாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சித்ராவை தாலுகா போலீஸார் கைது செய்தனர்.