ஒகேனக்கல் காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி நீர்வரத்து நொடிக்கு 2 லட்சம் கன அடியாக உள்ளது.
கர்நாடகம், கேரளத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு கடந்த ஒரு மாத காலமாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் பகுதியில் தொடர்ந்து நீர்வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 2.05 லட்சம் கனஅடியாக இருந்த நீர் வரத்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி நொடிக்கு 2.05 லட்சம் கனஅடியாக சற்றே குறைந்து காணப்படுகிறது. சராசரியாக இதே அளவு நீர்வரத்து திங்கள்கிழமையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரியில் குளிக்கவும் பரிசல் பயணத்துக்கும் விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. வனத்து றையினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் ஆகியோருடன் வருவாய்த் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.