கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை பெண் சாலை மறியலில் ஈடுபட்டார்.
ஒசூரை அடுத்த முத்தாலியைச் சேர்ந்தவர் ஆனந்த். லாரி ஓட்டுநரான இவரது மகள் தீபா (22). இவருக்கும், ஒசூர் அலசநத்தம் வெங்கடேஷ் நகரை சேர்ந்த சீனப்பா மகன் நவீன்( 33), என்பவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி திருமணம் நடந்தது.
கடந்த நவம்பரில் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபாவுக்கு பிறந்த குழந்தை ஒரு மாதத்திற்குள் இறந்தது. இந்த நிலையில், தீபாவை அவரது மாமனார், மாமியார் அழைத்து செல்லவில்லை.மேலும், அவரது கணவர் நவீனையும் சந்திக்க முடியவில்லையாம்.
ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தீபா அளித்த புகாரின் பேரில், தீபாவுடன் சேர்ந்து வாழ்வதாக நவீன் கூறியுள்ளார். ஆனால், கணவர் வீட்டுக்குச் சென்ற தீபாவை உள்ளே வரவிடாமல் கதவை பூட்டிவிட்டனராம்.
இதனால் வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட தீபா, அலசநத்தம் சாலையில் உறவினர்களுடன் மறியல் போராட்டம் நடத்தினார். தகவலறிந்து வந்த அட்கோ காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான போலீஸார், தீபாவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.