கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்களுக்கு விருது வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் மாவட்ட பொது சுகாதாரத் துறை, தேசிய தொழுநோய் திட்டம் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நலப்பணிகள் இணை இயக்குநர் அசோக்குமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரியா ராஜ், தொழுநோய் மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் ஆர்.புவனேஸ்வரி, கல்லூரி முதல்வர் பி.ரவிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் சி.கதிரவன் பேசியது: தொழுநோய் மைக்ரோ பாக்டிரியம் லெப்ரே என்ற கிருமியால் பரவுகிறது. மனிதர்களுக்கு உணர்ச்சியற்ற தேமல், படை, அரிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் குறித்து கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அருகில் உள்ள அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவது குறித்து அறிவுறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட தொழுநோய் நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சைக்கும், நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்களுக்கு விருது வழங்கப்படும். இம் மாவட்டத்தை தொழுநோய் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுப்பதோடு, அவற்றைத் தவிர்க்கும் வகையில் நாம் உறுதிமொழியேற்க வேண்டும் என்றார். இதில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு முற்றிலும் குணமடைந்தோர் கௌரவிக்கப்பட்டனர்.