சூளகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். இருவர் படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், சென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (24). இவர் ஒசூரில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரும், இவரது நண்பர்களான விருத்தாசலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (24), செல்வன் ஆகிய 3 பேரும் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி-ஒசூர் சாலையில் கோபசந்திரம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
வாகனத்தை ராஜ்குமார் ஓட்டிச் சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மைல்கல் மீது இவர்கள் சென்ற வாகனம் மோதியது.
இதில் ராஜ்குமார், முனியப்பன், செல்வன் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் தலையில் அடிபட்டு முனியப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராஜ்குமார், செல்வன் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.