ராயக்கோட்டையில் விவசாய மின் இணைப்பு வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய வணிக ஆய்வாளர் மற்றும் பெண் உதவியாளரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள கருக்கனஅள்ளியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சேட்டு (25), விவசாயி. இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ.50 ஆயிரம் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற ராயக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில (வடக்கு பிரிவு) விண்ணப்பித்திருந்தாராம்.
இந்த திட்டத்தில் விண்ணப்ப மூப்பு அடிப்படையில் மின்இணைப்பு வழங்கப்படுவது வழக்கம். எனவே, தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு பெற ராயக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தை அவர் அணுகி, வைப்புத் தொகையாக ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் செலுத்தி ரசீதும் பெற்றார்.
இந்த நிலையில், சேட்டுவின் விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக ராயக்கோட்டை மின்வாரிய வணிக ஆய்வாளர் வஜ்ரவேல், வணிக உதவியாளர் சிவசங்கரி ஆகியோர் ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக கேட்டனராம்.
அந்த தொகையை கொடுக்க விரும்பாத விவசாயி சேட்டு, இதுகுறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புப் போலீஸில் புகார் அளித்தார். அதையடுத்து, போலீஸாரின் ஆலோசனைப்படி ரூ.2,000 முதல்கட்டமாக தருவதாக மின்வாரிய ஊழியர்களிடம் அவர் தெரிவித்தார். அதன்படி, வெள்ளிக்கிழமை காலை வணிக ஆய்வாளர் வஜ்ரவேல் மற்றும் உதவியாளர் சிவசங்கரி ஆகியோரிடம் ரூ.2 ஆயிரத்தை வழங்கினார்.
அப்போது, மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கிருஷ்ணராஜ், ஆய்வாளர் முருகன், காவலர்கள் பஞ்சேஸ்வரம், பிரபாகரன், முத்துராஜ், விஜயகுமார், ராஜா, முருகன் ஆகியோர் வஜ்ரவேல் மற்றும் சிவசங்கரி ஆகிய 2 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர்களை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.