கெலமங்கலம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் (20), அஜய் (18), லோகேஷ் (13), ஆகாஷ் (13) ஆகிய 4 பேரும் வியாழக்கிழமை கெலமங்கலம் பட்டாளம்மன் கோயில் தெருவில் நடைபெற்ற பாட்டுக் கச்சேரி நிகழ்ச்சியை பார்க்க ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
கெலமங்கலம் சுல்தான்பேட்டை அருகே சென்ற போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் ஆகாஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஆகாஷ் உயிரிழந்தார். இதுகுறித்து கெலமங்கலம் காவல் ஆய்வாளர் (பொ) லட்சுமணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆகாஷ் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.