சந்தூரில் உள்ள திரெளபதியம்மன் கோயில் மகாபாரத விழாவில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வியாழக்
கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த சந்தூர் கிராமத்தில் திரெளபதியம்மன் கோயிலில் மகாபாரத விழா கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவில், தொடர்ந்து தினமும் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை 18 நாள்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஜெயராமனார் பாரத விரிவுரையும், செஞ்சி வட்டம், நாராயணமூர்த்தி பாரத கவி வாசிப்பும், இரவில் கூச்சானூர் ராஜா வாத்தியார் நாடக கலைஞர்களின் மகாபாரத தெருக்கூத்து நாடகங்களும் நடைபெற்று வந்தன.
இதனைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கோயில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. நாடக கலைஞர்கள் அம்மனை வேண்டி கிராமத்தை சுற்றி சண்டை போட்டு சென்றனர். பின்னர், துரியோதனன், பீமன் சண்டையில் துரியோதனன் இறப்பது போல் நாடகக் குழுவினர் நடித்துக் காண்பித்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு நடைபெற்ற குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். வெள்ளிக்கிழமை தருமர் பட்டாபிஷேகமும், சுவாமி ஊர்வலமும் நடைபெறுகிறது.
இவ்விழாவில் சந்தூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம்
செய்தனர்.