ஒகேனக்கல்லில் பிரதான அருவியை சரிசெய்யும் பணி மும்முரமடைந்துள்ளது.
கர்நாடக மற்றும் கேரள பகுதிகளில் கன மழை பெய்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், பிரதான அருவி செல்லும் நடைபாதை மற்றும் அருவி முற்றிலும் சேதமடைந்தன.
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால், வியாழக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாக தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், ஆற்றின் நடுவே மணல் மூட்டைகளை அடுக்கி பிரதான அருவியை சரிசெய்யும் பணி தொடங்கியுள்ளது. மேலும், ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க 57-ஆவது நாளாக மாவட்டநிர்வாகம் தடைவித்துள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.