ஊத்தங்கரையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணிகளை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் எஸ்.பிரபாகர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
ஆட்சியர் தலைமையில் குடிநீர், டெங்கு, தனிநபர் கழிவறை கட்டுதல் மற்றும் தெருவிளக்கு, முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வகையான பணிகள் குறித்தும், செய்ய வேண்டிய பணிகள் பற்றிய பல்வேறு கோரிக்கைகள் பற்றியும் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஊத்தங்கரை வேளாண் துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரனுக்கு ரூ.75 ஆயிரம் மானிய விலையில் பவர் டிரில்லர் கருவியை ஆட்சியர் வழங்கினார். இதில் வேளாண் அலுவலர் பிரபாவதி, வேளாண் உதவி இயக்குநர் (பொ) கலா, உதவி வேளாண் அலுவலர் தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
தொடர்ந்து ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகில் உள்ள பரசனேரியை பார்வையிட்டு, ஏரியை தூர்வாரி பராமரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, ஊத்தங்கரையில் கட்டப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.