திறந்தவெளி மலம் கழித்தலால் ஏற்படும் தீமைகள் குறித்து 385 கிராம ஊராட்சிகளில் வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இதில் ஆட்சியர் வா.சம்பத் பேசியது:
சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் திறந்தவெளியில் மலம் கழித்தலில் இருந்து விடுதலை வாரம் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக நான்கு விழிப்புணர்வு வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.
விழிப்புணர்வு வாகனங்களில் திறந்தவெளியில் மலம் கழித்தலால் ஏற்படும் தீமைகள், குழந்தைகள் உணவுக்கு முன்னும், பின்னும் மற்றும் மலம் கழித்தற்கு பின் சோப்புப் பயன்படுத்தி கைகளைக் கழுவுதல், பள்ளிகளில் சுகாதார உறுதி மொழி எடுத்தல், இரு உறிஞ்சு குழிகளுடன் கூடிய குறைந்த செலவில் கழிவறை எவ்வாறு கட்டப்படுகிறது என்ற விவரங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாகனங்கள் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் சுற்றுப் பயணம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் ஒலி விளம்பரங்கள் செய்யப்படுகின்றன என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் நா.அருள்ஜோதி அரசன், திட்ட அலுவலர் எஸ்.ஈஸ்வரன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.