வாழப்பாடியை அடுத்த பேளூர் அரசினர் ஆண்கள் பள்ளியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் அன்புச் சுவர் திறக்கப்பட்டது.
ஒருவருக்கு தேவையற்ற பொருள், மற்றொருவருக்கு பயனாகும் என்பதால், தேவையற்ற பொருள்களை வைக்கவும், அந்தப் பொருளை தேவைப்படுவோர் எடுத்துச் செல்ல வசதியாக, "அன்புச்சுவர்' என்ற பெயரில், சமூக ஆர்வலர்களால் புதிய சேவை திட்டம் தொடங்கப்பட்டது.
சேலம் மாவட்டத்திலுள்ள பழைமையான பள்ளிகளில் ஒன்றான பேளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வெள்ளிக்கிழமை அன்புச்சுவர் திட்டத்தை பள்ளியின் தலைமையாசிரியர் திருஞானகணேசன் தொடக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் நன்மைகள், மனிதநேயம், சேவை மனப்பான்மை, பொருளாதார முக்கியத்துவம் குறித்து ஆசிரியர் சிவ.எம்கோ விளக்கினார். அன்புச்சுவர் அலமாரி அடுக்ககத்தில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வைத்த பொருள்களை, தேவைப்படும் மாணவர்கள் எடுத்துச் சென்றனர். அரசுப் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள அன்புச்சுவர் திட்டத்துக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், சேவை மனப்பான்மை வளர்வதற்கு வழிவகுக்கும் எனவும் பள்ளித் தலைமையாசிரியர் திருஞானகணேசன் தெரிவித்தார்.