ஆர்.கே.நகர் தொகுதியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் திமுக மட்டுமே வெற்றி பெற முடியும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, சேலம் தொங்கும் பூங்கா எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நாட்டின் வளர்ச்சிக்கு காந்தி, நேரு ஆகியோரின் அறிவுறுத்தலின்படி அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொடுத்தவர் சட்டமேதை அம்பேத்கர். இதே நாளில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. காந்தி, நேரு ஆகியோர் கட்டிக் காத்த மதச்சார்பற்ற கொள்கைகளை இடித்த நாள் இது.
தமிழகத்தை ஆளும் அரசு, மத்திய பாஜக அரசிடம் அடங்கி நடக்கிறது. மாநில சுயாட்சிக் கொள்கைகளை இழந்துவிட்டது.
குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக மீனவ மக்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. குமரியை பேரிடர் மாவட்டமாக அறிவித்து நிதியும், நிவாரணமும் வழங்கிட வேண்டும்.
குமரி மாவட்டம் குறித்து தமிழக அரசு முழுமையான அறிக்கையை இதுவரை தரவில்லை. கேரள அரசு தமிழக மீனவர்களை மிகுந்த பரிவுடன் பாதுகாத்துவருகிறது.
மேலும், ஆர்.கே.நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஐனநாயக முறைப்படி செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்பட்டால் தி.மு.க.வே வெற்றிபெறும். தேர்தல் ஆணையச் செயல்பாடுகள் பாஜவுக்கு ஆதரவாக உள்ளது. இதே நிலை நீடித்தால், மக்கள் எதிர்விளைவுகளை எடுக்க நேரிடும். விஷால், தீபா உள்ளிட்டவர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி தேர்தல் ஆணையத்தின் குளறுபடியைக் காட்டுகிறது.
ஆர்.கே. நகர் தொகுதியில் வியாழக்கிழமை (டிச.7) முதல் திமுகவுக்கு ஆதரவாக இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தை தொடங்குகின்றன என்றார்.
பேட்டியின்போது, மாவட்டச் செயலர் மோகன், துணைச் செயலர் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.