சேலத்தில் பை விற்பனைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.54 லட்சம் திருடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜூஜிராம். இவர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வீரபாண்டியார் நகர் பகுதியில் பைகள் விற்பனை கடை நடத்தி வருகிறார்.
பள்ளபட்டி காவல் நிலையத்துக்கு அருகிலேயே இக்கடை உள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் வெள்ளிக்கிழமை காலை கடைக்கு வந்து பார்த்த போது, கடையின் இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், கடையில் இருந்த ரூ.1.54 லட்சம் ரொக்கப் பணம் திருட்டு போனது தெரியவந்தது. அதேபோல பைகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்கான ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடயவியல் துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
இதனிடையே அதே பகுதியில் உள்ள செருப்புக் கடையில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகவும், காவல்நிலையத்துக்கு மிக அருகிலும் உள்ள கடைகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதி மக்களிடயே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.