வாழப்பாடி அருகே கோதுமலை வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், 50 ஆண்டுகள் பழமையான சேசன்சாவடி வன ஆராய்ச்சி மையத்தில், உற்பத்தி செய்த மரக்கன்றுகளை நடவு செய்வதிலும், ஆராய்ச்சி மேற்கொள்வதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி கோதுமலை வனப் பகுதியில், தமிழக அரசு வனத் துறையின் கோவை மண்டல வேளாண் காடுகள் ஆராய்ச்சி நிறுவனத்தின், சேலம் சரக வன ஆராய்ச்சி மையம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
36 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து காணப்படும் இந்த வன ஆராய்ச்சி மையத்தில், 1968-இல் இருந்து சந்தனம், சிவப்பு சந்தனம், மூங்கில், கடுக்காய், புளியன் உள்ளிட்ட பல்வேறு ரக மரங்களின் வளரியல்பு, பயன்பாடு குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதுமட்டுமின்றி, தற்காலத்துக்கேற்ப விதை ஆதாரத் தோட்டம், மூலவுயிர் முதலுரு வங்கி (ஜெர்பிளாசம் வங்கி), வேளாண் காடுகள், குளோனிங் மற்றும் சந்ததி விதைத் தோட்டம், குளோனிங் வங்கி ஆகிய நவீனப் பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எரிபொருள், மரச் சாமான், மூலிகை மற்றும் உணவுப் பொருள்களாகப் பயன்படும் மரங்களை, குறுகிய காலத்தில் விளைச்சலுக்குக் கொண்டு வந்து கூடுதல் சாகுபடியைப் பெறும் நோக்கில், பல்வேறு மர வகைகள் குறித்து சேசன்சாவடிமையத்தில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
கோதுமலை வனப் பகுதியில் கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால், கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் அடியோடு சரிந்து போனதால், ஆராய்ச்சி மையத்திலுள்ள ஆழ்துளைக் கிணறுகளும் வறண்டு போயின.
அதனால், வன ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்துள்ள மரக்கன்றுகளை நடவு செய்வதிலும், கடந்த இரு மாதங்களாகத் தொய்வு ஏற்பட்டுள்ளது.