காடையாம்பட்டி அருகேயுள்ள குண்டுக்கல் கிராமத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த மாணவி உயிரிழந்தார்.
குண்டுக்கல் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி சந்திரன் மகள் விஜயலட்சுமி (15). இவர் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி விஜயலட்சுமி காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
மேலும், இந்தப் பகுதியில் குழந்தைகள், பெண்கள் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மேட்டூர் சார் -ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர். காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து கிராமம் முழுவதும் கொசு மருந்து அடித்து சுகாதாரப் பணிகளை செய்தனர். மேலும், கிராம மக்கள் தங்களது பகுதிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினர்.