மேட்டூர் காவிரியில் புதுமணத் தம்பதியர் தலை ஆடியைக் கொண்டாடினர்.
ஆடி முதல்நாளில் புதுமணத் தம்பதியருக்கு மாமியார் வீட்டில் தலை ஆடி கொண்டாடுவது வழக்கம். திங்கள்கிழமை தலை ஆடிப் பண்டிகை என்பதால், மாமியார் வீட்டுக்கு மருமகன்கள் அழைக்கப்பட்டு, மேட்டூர் காவிரியில் நீராட வைத்து விருந்து வைப்பார்கள். திங்கள்கிழமை மேட்டூர் காவிரியில் ஏராளமான பொதுமக்களும் புதுமணத் தம்பதியரும் நீராடினர்.
புதுமணத் தம்பதியர் தங்களின் மணமாலைகளை வாழை இலையில் வைத்து, தீபாராதனை காட்டி காவிரி நீரில் விட்டுச் சென்றனர். காவிரியில் நீராட வந்த பொதுமக்கள் அணைக்கட்டு முனியப்பனைத் தரிசித்து அணை பூங்காவுக்குச் சென்று மகிழ்ந்தனர். மேட்டூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் தினகரன் தலைமையில் போலீஸாரும், ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.