ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது சனிக்கிழமை இரவு கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
அம்மம்பாளையம் கல் ஒட்டர் தெருவைச் சேர்ந்த ராமன்செட்டி மகன் மருதமுத்து (45). கட்டடத் தொழிலாளி. இவர் சனிக்கிழமை காட்டுக்கோட்டையில் வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அம்மம்பாளையம் தேசிய புறவழிச்சாலையில் வளைவில் திரும்பும்போது சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை நோக்கி அத்தியப்பன் (38) என்பவர் ஓட்டிச் சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மருதமுத்துவுக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கேசவன் வழக்குப் பதிவு செய்து மருதமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.