தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாணயங்கள் அதிகளவில் மக்களிடம் புழக்கத்தில் இருந்து வருவதால் வியாபாரிகள் திணறி வருகின்றனர்.
தம்மம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 -க்கும் மேற்பட்ட ஊர்களில் கடந்த ஒரு மாதமாக பொதுமக்களிடம் அதிகளவில் நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. கடந்த எட்டு மாதங்கள் முன்பு நாணயங்களுக்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. புதிய இரண்டாயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளை அரசு வெளியிட்டபோது, ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் வங்கிகள் அதிகளவில், நாணயங்களை புழக்கத்தில் விட்டன.
தற்போது அனைத்து ரூபாய் நோட்டுகளும் பொதுமக்களுக்கு மிக எளிதாகக் கிடைத்துள்ள நிலையில், நாணயங்களும் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. இதனால் பொதுமக்கள், தங்களிடம் இருக்கும் அதிகளவிலான நாணயங்களை, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். நாணயங்களுக்கு தட்டுப்பாடு நிலவிய நேரத்தில் பெரும் உணவகங்கள், வணிக நிறுவனத்தினர் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சரியான சில்லறைகளைத் தருவதற்காக, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையிலும் கமிஷன் வழங்கி சில்லறை நாணயங்களை வாங்கினார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைக்கீழாக மாறியுள்ளது. கடைககள், வர்த்தக நிறுவனங்களில் நாணயங்கள் ஏராளமாகக் குவிகின்றன.
இதுகுறித்து தம்மம்பட்டியைச் சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:
மளிகை, வீட்டு உபயோகப் பொருள்களை மொத்த விலையில்
சிறு கடைகளுக்கு விநியோகம் செய்கிறோம். அதற்கு கடைக்காரர்கள் ரூ. 4 ஆயிரம், ரூ. 5 ஆயிரத்தை நாணயங்களாகத் தருகின்றனர். எங்களிடம் மட்டுமே ரூ. 60 ஆயிரத்துக்கு நாணயங்கள் சேர்ந்து விடுகின்றன. இதனை எப்படி மீண்டும் சுழற்சிக்கு விடுவது என்று தெரியவில்லை என்றார்.
டீக்கடைக்காரர் மாணிக்கம் கூறியதாவது:
பத்து ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் வாங்கத் தயங்குகின்றனர். ரூ.5, ரூ.2, ரூ.1 நாணயங்கள் அதிகளவில் புழக்கத்தில் விடப்படுகின்றன. முன்பு கமிஷனுக்கு கிடைத்த நாணயங்கள், தற்போது கமிஷன் இல்லாமலேயே தாராளமாகக் கிடைக்கின்றன என்றார்.