சேலத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீட்டு பணத்தைத் திருப்பித் தரக்கோரி வாடிக்கையாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 13 மாதத்தில் இரட்டிப்பாக தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தது.
இதைத்தொடர்ந்து சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர்.
பணத்தை முதலீடு செய்தவர்களின் காலம் முதிர்வு பெற்ற பிறகும், பணத்தைத் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், தாங்கள் செலுத்திய தொகையைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். பணத்தைத் தற்போது தர முடியாது என நிர்வாகத் தரப்பில் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, வாடிக்கையாளர்களில் 10 பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை பிற்பகல் அலுவலகத்துக்குள் நுழைந்து, பணத்தைத் திருப்பித் தர வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த இதர வாடிக்கையாளர்களும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு, முதலீட்டு பணத்தை முதிர்வு தொகையுடன் திருப்பித் தரும்படி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.