மேட்டூர் அணை வண்டல் மண்ணை விவசாயப் பயன்பாட்டுக்கு அதிகளவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார்.
அணை வண்டல் மண்ணை விவசாயப் பயன்பாட்டுக்கு வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
அணையிலிருந்து வண்டல் மண்ணை விவசாயப் பயன்பாட்டுக்காக எடுப்பதற்கு தகுந்த இடங்களை அடையாளம் காண, துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து எடுக்கப்படவுள்ள வண்டல் மண்ணின் அளவு, மேட்டூர் அணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை, வண்டல் மண்ணை எடுக்கத் தேவைப்படும் உபகரணங்களின் விவரம் போன்ற தகவல்களை அறிக்கையாக அளிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து மேட்டூர் அணையைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில், மேட்டூர் சார்-ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.