சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தம்பதி, குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர் முகாமில், கெங்கவல்லி வேப்பம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் (40) குடும்பத்தினருடன் மனு அளிக்க வந்தார்.
பின்னர், அவர்கள் திடீரென ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
விசாரணையில், அவர்கள் கெங்கவல்லியைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மனைவி கலைச்செல்வி (35), மகள் சாரதி (9), மகன் அரவிந்தன் (4) எனத் தெரியவந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜெயராஜ் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 5 ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயம் செய்து வந்தாராம்.
இதனிடையே, தோட்டத்துக்கு செல்லும் வழியில் சிலர் முள்களை வெட்டி போட்டு பிரச்னை செய்து, மிரட்டல் விடுத்தனராம்.
இதுதொடர்பாக, கெங்கவல்லி காவல் நிலையம் மற்றும் ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் மன வேதனை அடைந்த ஜெயராஜ், குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அவரிடம் மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.