காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 3,674 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, திங்கள்கிழமை காலை நொடிக்கு 2,229 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக நொடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால், திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85.08 அடியாகச் சரிந்தது. அணையின் நீர் இருப்பு 47.20 டி.எம்.சி.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருவதால், நடப்பாண்டில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.