குடிநீர் வசதி செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் பானுமதி தலைமை வகித்தார். சங்ககிரி வட்டச் செயலர் எஸ்.கே.சேகர், நிர்வாகிகள் செந்தில்குமார், சீனிவாசன், மாணிக்கம், மாதேஸ்வரன், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், எர்ணாபுரம் கிராமத்துக்குள்பட்ட கிழக்கு ஜெயபுரி வீதி, கரிமேடு, சொரியம்பட்டி ஆகிய பகுதிகளில் குடிநீர் வசதி செய்து தரக் கோரி வலியுறுத்தப்பட்டது. பின்னர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தமிழ்ச்செல்வனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.