வட கிழக்கு பருவ மழையையொட்டி, சங்ககிரி தீயணைப்புத் துறையின் சார்பில் இயற்கை பேரிடர் மேலாண்மை பயிற்சி சந்தைபேட்டை செல்லாண்டியம்மன் கோயில் குளத்தில் வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்டது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு கயிறு கட்டி மீட்பது, முதலுதவி அளித்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது, வெள்ளத்தில் சிக்கியவர்கள் அருகில் உள்ள பொருள்களை வைத்துக்கொண்டு கரைக்கு வர எவ்வாறு முயற்சி செய்வது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை செயல்முறை விளக்கத்துடன் சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வீரர்கள் நிகழ்த்திக் காண்பித்தனர்.
கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகன், வட்டாட்சியர் கே.அருள்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் வீரபாண்டியன், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் பி.மோகன், சமூக ஆர்வலர் ஆர்.ராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.