ஓமலூரில் த.மா.கா. உண்ணாவிரதம்
டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகளைத் தடுக்கக் கோரி, சேலம் மேற்கு மாவட்ட தமாகா சார்பில் ஓமலூரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் இறந்துள்ளனர். குறிப்பாக ஓமலூர் வட்டார கிராமங்களில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சலால் தொடரும் உயிரிழப்புகளை தடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ஓமலூர் பேருந்து நிலையம் முன் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் கரு.வெ. சுசீந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் மாநில அரசைக் கண்டித்து நிர்வாகிகள் பேசினர். தமாகா இளைஞர் அணி மாநில செயலாளர் கே.எஸ். ரகுநந்தகுமார், ஓமலூர் வட்டாரத் தலைவர் ஓ.சி. ராஜேந்திரன் ஆகியோர் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.