நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கட்டிநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சங்ககிரி அருகே நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பள்ளிக்கல்வி பரிமாற்றம் திட்டத்தின் கீழ் சுற்றுலா வந்தனர்.
நிகழ்ச்சிக்கு சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) விஜயா தலைமை வகித்துப் பேசினார். நட்டுவம்பாளையம் அரசு பள்ளியில் சென்னை டாடா நிறுவனத்தின் சார்பில் 8 மற்றும் 9 வகுப்பு மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கான சான்றிதழ்கள் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டன.
நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பெ. சுமதி, உதவி தலைமையாசிரியர் கோ.சீனிவாசன், கட்டிநாயக்கன் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை, ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
கட்டிநாயக்கன்பட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு பாடங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பில் அறிவியல் பரிசோதனை என்ற தலைப்பில் குறும்படம் மூலம் விளக்கிக் கூறப்பட்டன.