ஓமலூர் அருகேயுள்ள சின்னதிருப்பதி கோயிலில் ஐந்தாம் சனிக்கிழமையையொட்டி தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஓமலூர் அருகேயுள்ள காருவள்ளி சின்னதிருப்பதியில் அருள்மிகு பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி திருக்கோயில் உள்ளது. சுமார் ஆயிரமாண்டுகள் பழைமையான இந்தக் கோயிலில் புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனை நடத்தப்படும். அதேபோன்று சனிக்கிழமை விஷேச நாளாகக் கருதப்பட்டு கடந்த நான்கு வாரங்களும் பக்தர்கள் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்தநிலையில் ஐந்தாம் சனிக்கிழமையையொட்டி (அக்.21) தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் வெங்கட்டரமண சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இதையடுத்து பல்வேறு வகையான பூஜைகள் செய்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க தேர் இழுக்கப்பட்டது. மேலும், மாணவ, மாணவிகளின் கோலாட்டம், நடனம், வாத்தியங்கள் என தேர் முன்பாக பக்தி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இந்த விழாவில் சேலம் எம்.பி. பன்னீர்செல்வம், ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல், முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சுவாமியை வழிபட்டனர்.பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்ததால் ஓமலூர் டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.