மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பகுதியில் சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்குக் கரை விவசாயிகள் நெல் நடவுப் பணியினை தொடங்கியுள்ளனர்.
கடந்த 2-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் கடை மடை பகுதி விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று கடந்த சில நாள்களாக அதிகளவில் காவிரியில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காவிரி கிழக்குக் கரை விவசாயப் பகுதிகளான கூடக்கல், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, கல்வடங்கம் உள்ளிட்ட கரையோரப் பகுதி விவசாயிகள் நெல் நடவுப் பணிகளை தொடங்கியுள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் பொன்னி, வெள்ளைப்பொன்னி ரக நெல்களை பயிரிட்டு வருகின்றனர். மேலும் பி.பி.டி, ஐ.ஆர்.20 உள்ளிட்ட நடுத்தர ரக நெல் வகைகளும் பயிரிடப்பட்டு வரும் நிலையில், விரைவில் மேட்டூர் அணையின் இடது, வலதுகரை வாய்கால்களில் பாசனத்திற்காக நீர் திறந்துவிடவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.