புத்திரகவுண்டன்பாளையத்தில் மினிலாரி மோதியதில் மின் வாரிய ஊழியர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஆரியபாளையம் கிழக்குக்காடு பகுதியைச் சேர்ந்த சின்னமுத்து மகன் முனியப்பன் (45). இவர், புத்திரகவுண்டன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வந்தார்.
இவரும், அதே அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஏத்தாப்பூர் அபிநவம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் முருகன் (47) என்பவரும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணாபுரத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்த மினிலாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் முனியப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த முருகன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணக்குமரன் வழக்குப் பதிவு செய்து முனியப்பன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.