ஓமலூர் வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக லேசான சாரல் மழை ஞாயிற்றுக்கிழமை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்ததோடு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வருகிறது.
மேலும், காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததுடன், காற்று வீசாமல் அனல் காற்று வீசுகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சித்திரை மாதம் பிறந்த நிலையில் மாலையில் இருந்து ஓமலூர் நகரம் மற்றும் வட்டாரத்தில் உள்ள ஒருசில கிராமப்பகுதிகளில் மழை பெய்தது. அவ்வப்போது விட்டு விட்டு பெய்த இந்த மழை, மாலை 6 மணியில் இருந்து7 மணி வரை ஒரே சீராக, லேசான சாரல் மழையாக நீடித்தது.
ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி, ஆட்டுக்காரனூர், பெருமாள்கோவில், கருக்கல்வாடி, கோணகாபாடி, பாலகுட்டபட்டி உட்பட ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்தில் உள்ள ஒருசில கிராம பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
சுமார் ஒருமணிநேரம் பெய்த இந்த மழையால்பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், குளிர்ந்த காற்று வீசியது.