திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, கொங்கணாபுரம் பகுதி ஒன்றிய திமுக சார்பில் வியாழக்கிழமை மெளன ஊர்வலம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், ஒன்றியச் செயலாளர் ப. பரமசிவம், மாவட்டத் தகவல் தொடர்பு அணிச் செயலாளர் திருநாவுக்கரசு, பழனிசாமி, சவுந்தரராஜன்,கரட்டூர்செல்வம், மகளிர் அணி அமைப்பாளர் பெருமாயி, வனஜா உள்ளிட்ட திரளான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப் படத்தை ஏந்திய திமுகவினர் ஊர்வலமாகச் சென்றனர்.
சங்ககிரியில்...
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை மௌன அஞ்சலி செலுத்தினர்.
நீதிமன்ற வளாகத்தில் அவரது உருவப் படத்துக்கு மூத்த வழக்குரைஞர் எஸ். கிறிஸ்டோர் தலைமையில் வழக்குரைஞர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். வழக்குரைஞர் சங்கங்களின் தலைவர்கள் மோகன்பிரபு, முருகானந்தம், என். சண்முகசுந்தரம், செல்லப்பன், ஆண்டனி ராபின்சன், ஆர். ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஓமலூரில்...
ஓமலூர்,சுற்றுவட்டார கிராமங்களில் திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் 2-வது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றன.
ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்தில் கண்ணீர் அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஓமலூர் பேரூர் திமுக சார்பில் திமுக, பாமக, காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசு ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் கலந்து கொண்டு அமைதி ஊர்வலம் நடத்திப்பட்டது.
ஊர்வலத்தின் முடிவில், திமுக தலைவருக்கு அனைத்து கட்சி சார்பில் புகழஞ்சலி செலுத்தப்பட்டன. இதேபோன்று காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள தாராபுரம் கிராம திமுக சார்பில் கண்ணீர் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
திமுக தலைவர் கருணாநிதியின் படத்தை ஏந்தி பல்வேறு கிராமங்கள் வழியாக இறுதி அமைதி ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர். தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் திமுக தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் அமைதி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.