திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்த திமுக தொண்டர்கள் இருவர் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
எடப்பாடியை அடுத்த சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காவேரி கவுண்டர் மகன் துரைசாமி (59). டீக்கடை நடத்தி வரும் இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தீவிர விசுவாசி. புதன்கிழமை அன்று மாலை கருணாநிதியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது துரைசாமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உடலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய திமுக பொறுப்பாளர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஆத்தூரில்..
கல்லாநத்தம் ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மெய்யன் (50). கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு புதன்கிழமை உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கல்லாநத்தம் ஊராட்சியைச் சேர்ந்தவர் மெய்யன் (50). ஆட்டோ ஓட்டுநர். இவர், அப் பகுதியில் திமுக கிளைக் கழகச் செயலாளராக உள்ளார்.
இவர், கருணாநிதியின் மறைவையொட்டி, மனவேதனையில் இருந்ததாகவும் கருணாநிதியின் இறுதி சடங்குகளைப் பார்த்தவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது வழியில் உயிரிழந்தார். இது குறித்து ஆத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த மெய்யனுக்கு பூங்கோதை (45) என்ற மனைவியும், சின்னதுரை (24) என்ற மகனும் உள்ளனர்.