காவிரி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி ஆற்றிலிருந்து எடப்பாடி நகராட்சி பகுதிக்கு குடிநீர் எடுக்கும் பணியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக எடப்பாடி நகராட்சி குடிநீர்த் திட்டம், சேலம் இரும்பாலை கூட்டுக் குடிநீர்த் திட்டம், எடப்பாடி - ராசிபுரம் கூட்டுக்குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர் உந்து நிலையங்கள் வாயிலாக, நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர் காவிரி நீர் சுத்திகரிக்கப்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் அதிக அளவிளான உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பூலாம்பட்டி பகுதியில் நீர் உந்து நிலையங்கள் அமைந்திருக்கும் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலும் அப்பகுதியில் உள்ள நீர் உந்து நிலையங்களில், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், அங்கு வழக்கமான பணிகள் தடையின்றி நடைபெற்று
வருகிறன்றன.
இதுகுறித்து எடப்பாடி நகராட்சி ஆணையர் முருகன் கூறுகையில்: எடப்பாடி நகராட்சிப் பகுதியில் உள்ள 30 வார்டுகளுக்கும், பூலாம்பட்டியில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்தே பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இரண்டு பகுதிகளாகச் செயல்படும் நீர் உந்து நிலையங்கள் அமைந்துள்ள காவிரிக் கரைப் பகுதியில் அண்மையில், வெள்ளத் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டதுடன், கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஆற்றிலிருந்து நீரினை உறிஞ்சும் குழாய்கள் வெள்ளத்தின் வேகத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தபோதும், இங்குள்ள இரண்டு நீர் உந்து நிலையங்களும் நல்லமுறையில் இயங்கி வருகின்றன. இதனால் எடப்பாடி நகராட்சிப் பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியில் எந்த பாதிப்பு ஏற்படாது என்றார். மேலும் தற்போது காவிரியில் புதிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வழங்கப்படும் குடிநீரினை பொதுமக்கள் காய்ச்சிக் குடிக்கும்படி நகராட்சி சார்பில் வேண்டுகோள்விடப்பட்டுள்ளது.