எடப்பாடி அருகே நீர் உந்து நிலையத்தில் வெள்ளநீர் புகுந்ததால் குடிநீர் விநியோகத்தில் சிக்கல்?
காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் எடப்பாடி - ராசிபுரம் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எடப்பாடியை அடுத்துள்ள நெடுங்குளம் கிராமம், காட்டூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் உந்து நிலையம் மூலம் காவிரி ஆற்றில் எடுக்கப்படும் நீர், அங்குள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, குழாய் வழியாக கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, ஆட்டையாம்பட்டி மற்றும் ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அண்மையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட அதிகப்படியான உபரிநீரால், காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக நீர் உந்து நிலையத்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள இயந்திரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் வழக்கமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ள உபகரணங்களை வேறு இடங்களுக்கு மாற்றிடவும், தற்காலிகமாக மாற்று வழியில் குடிநீர் விநியோகம் நடைபெற்றிடவும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் காவிரியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில், சம்பந்தப்பட்ட கூட்டுக்குடிநீர்த் திட்ட நீர் உந்து நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கும் பணி சீரடைய மேலும் சில நாள்களாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.