ஓமலூர் அருகே காதல் திருமணம் செய்து பெண்ணை அவரது உறவினர்கள் கடத்திச் சென்று விட்டதாக அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓமலூர் அருகேயுள்ள தெசவிளக்கு பள்ளிக்கொண்டான் பாறை பகுதியைச் சேர்ந்த சித்தையன் மகன் பிரபு (26). இவர் கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறார். இவரும் தனியார் மகளிர் கல்லூரியில் பயின்று வந்த அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகள் கலைச்செல்வி (20) என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் அம்மன் கோயிலில் நண்பர்கள் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து கலைச்செல்வியின் பெற்றோர் தாரமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து பிரபுவை காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர். பிரபுவும், கலைச்செல்வியும் காரில் தாரமங்கலம் காவல் நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கார் ஓமலூர் அருகே சிக்கம்பட்டி கிராமத்தில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த கலைச்செல்வியின் உறவினர்கள் 20 பேர் காரை வழிமறித்து பிரபுவை தாக்கிவிட்டு, கலைச்செல்வியை கடத்திச் சென்று விட்டதாக பிரபு தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கலைச்செல்வியின் உறவினர் தங்கராஜு உள்பட 20 பேரை தேடி வருகின்றனர்.