சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள காவேரிப்பட்டி அக்ரஹார கிராமத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளில் வருவாய்த் துறையினர் மேற்கொண்டுவரும் பணிகளை வருவாய் கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
சங்ககிரி வட்டம், காவிரி கரையோரப் பகுதியில் உள்ள காவேரிப்பட்டி அக்ரஹாரம் கிராமத்தில் காவிரி வெள்ள நீர் புகுந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் குடியிருந்து வந்தவர்கள் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருவதால் சங்ககிரி வருவாய்த் துறையினர், காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காவேரிப்பட்டி அக்ரஹாரம் கிராமப் பகுதியில் மண்டல துணை வட்டாட்சியர் சிவராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் கவிதா, ராஜாராமன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி கரையோரம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை வருவாய் கோட்டாட்சியர் டி.ராமதுரை முருகன் பார்வையிட்டு பாதுகாப்புப் பணிகளையும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். காவேரிப்பட்டி அக்ரஹாரம், கோனேரிப்பட்டி, கோனேரிப்பட்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் விவசாயம் சார்ந்த பணிகள், மீன் பிடி தொழில் மட்டுமே பிரதானமாக உள்ளன. நிலங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் விவசாயப் பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள இயலாத நிலையிலும், மீனவர்கள் ஆற்றில் மீன் பிடிக்க முடியாத நிலையிலும் உள்ளனர். வெள்ள நீர் வடியும் வரை இப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.