மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நொடிக்கு 2 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த உபரி நீர் வரத்து காரணமாக கடந்த 11-ஆம் தேதி நிகழாண்டில் மேட்டூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பியது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 1,91,516 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து நொடிக்கு 2, 05, 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு நீர்வரத்தை விட கூடுதலாக நீர் திறக்கப்படுவதால், கடந்த ஒரு வாரத்துக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 119.85 அடியாகச் சரிந்தது. அணையின் நீர் இருப்பு 93.23 டி.எம்.சி.யாக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணியளவில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 2 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழாண்டில் தான் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 2 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் மழை சற்றுத் தணிந்து வருவதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறையும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.