கடந்த ஆண்டில் கொடிநாள் நிதியாக ரூ.1.53 கோடி வசூல்: ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் கொடிநாள் நிதியாக ரூ.1.53 கோடி வசூல் செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் கொடிநாள் நிதியாக ரூ.1.53 கோடி வசூல் செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முப்படையினர் கொடிநாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், கொடிநாள் உண்டியலில் நிதியளித்து உண்டியல் வசூலை தொடக்கி வைத்தார். 
தொடர்ந்து முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆட்சியர் பேசியது: முப்படை வீரர்களின் மகத்தான சேவையினை நினைவு கூறும்  வகையில் முப்படையினர் கொடிநாள் ஆண்டுதோறும்  டிசம்பர் 7 ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 
கொடிநாள் வசூலில் சேர்க்கப்படும் தொகையை கொண்டு முப்படையில் பணியாற்றிய வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்திட பயன்படுத்தப்படுகிறது. 
 சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ.1,30,54,700  நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இலக்கை விட அதிகமாக ரூ.23,25,600 அதிகம் வசூல் செய்யப்பட்டு மொத்தம் ரூ.1,53,80,300 வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. 
இந்த ஆண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ.1,43,60,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே முன்னாள் படைவீரர்கள் குடும்பங்களின் நலனுக்காக கொடிநாள் வசூலினை அனைவரும் அதிக அளவில் வழங்கிட வேண்டும். இக்கொடிநாள் மூலம் வசூல் செய்யப்படும் நிதி, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் பல்வேறு நலத்திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது. 
தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியில் இருந்து 2017 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு, இரண்டாம் உலகப்போர் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி 160 நபர்களுக்கும், வறிய நிலையில் உள்ளோர்க்கு மாதாந்திர நிதியுதவி 47 நபர்களுக்கு, மருத்துவ காரணங்களுக்கான ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி 28 நபர்களுக்கு, திருமண மானியம் 3 நபர்களுக்கு என மொத்தம் 504 பேருக்கு  ரூ.97,26,971 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் படைவீரர்களின் கோரிக்கையை தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர் தே.பிரபாகர், சேலம் வருவாய் கோட்டாட்சியர் செழியன், விமானப்படை என்.சி.சி பிரிவின் கமான்டிங் ஆபிசர் விங் கமான்டர் ஜெயந்தன், முன்னாள் படைவீரர் நல கண்காணிப்பாளர் அ.அலெக்ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com