சேலத்தை அடுத்த மேச்சேரியில் உரிய ஆவணமின்றி 4 மினி லாரிகளில் வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படவிருந்த 12 டன் வெல்லத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் கருப்பூர், ஓமலூர் பகுதிகளில் வெல்லம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதனிடையே வெல்லத்தில், சர்க்கரை மற்றும் வேதிப்பொருள் கலக்கக் கூடாது என உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வெல்லப் பைகளில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி இடம் பெற வேண்டும் என்றும், விற்பனைக்கு கொண்டு செல்லும்போது தேவையான ஆவணத்தை வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே ஓமலூர் அருகே மேச்சேரி பிரிவு சாலை பகுதி மற்றும் கொங்கணாபுரம் பகுதிகளில் வெல்லம் கொண்டு சென்ற வாகனங்களை நிறுத்தி உணவுப் பாதுகாப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனர்.
இதில் வெல்லம் கொண்டு செல்வதற்கான போதிய ஆவணம் ஏதும் இல்லை எனத் தெரியவந்தது. மேலும் வெல்ல பைகளில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி ஆகியவை எதுவும் இடம்பெறவில்லை எனத் தெரிகிறது.
இந்தச் சோதனையில் ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படவிருந்த 4 மினி லாரிகளிலிருந்த 12 டன் வெல்லத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 மினி லாரிகளிலிருந்த 12 டன் வெல்லத்தை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக மாவட்டஉணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சேலத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் வெல்லம் விவரம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வெல்லத்தை அதன் உரிமையாளர்கள் போதிய விளக்கம் மற்றும் உரிமம், ஆவணங்களை காண்பித்து எடுத்துச் செல்லலாம். அதேபோல வெல்ல மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உள்படுத்த உள்ளோம் என்றனர்.