பத்மாவத் திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், சேலத்தில் திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீசியதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள பத்மாவத் திரைப்படம் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த வாரத்தில் வெளியான இத் திரைப்படம் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பத்மாவத் படம் தொடர்பான விளம்பர பேனர் திரையரங்கு முன் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அந்த வழியாகச் சென்ற மர்ம நபர்கள் திடீரென திரையரங்கு மீது பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டுச் சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக பள்ளப்பட்டி போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், அப்பகுதியில் இருந்த 25 சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் தலைக்கவசம் அணிந்து செல்வது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போல இருந்தனர். இதையடுத்து, காவல்ஆய்வாளர் குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாபுசிங் (25), மகேந்திரசிங் (28), கோபால்சிங் (30) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட மூவரும் புதிய பேருந்து நிலையம் வீரபாண்டியார் நகரில் கடை வைத்து வியாபாரம் செய்து வருவது தெரியவந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பத்மாவத் படத்துக்கு தடை விதித்திருப்பதும், தங்களைப் புண்படுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்துள்ளதாலும் சேலத்தில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து , பெட்ரோல் குண்டு வீசியதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
கைதான மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.