கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி ஓய்வுபெற்றவர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6,500 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர்கள் சங்கத்தின் பொது பேரவைக் கூட்டம் சேலத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில தலைவர் கே.சுரேந்திரன், மாவட்டத் தலைவர் கே.லோகநாதன், மாவட்டச் செயலர் செல்வராஜி, மாநில துணை தலைவர் கே.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி ஓய்வுபெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,500 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியதாரர் குடும்பத்துக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசிக்கு நடுவே தமிழக அரசு உயர்த்திய பேருந்துக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியதாரருக்கு பேருந்து பாஸ் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வகையில் ஓய்வூதியத் தொகையை உயர்த்தி தர வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.