ஓமலூரில் குற்றவியல் நடுவர், உரிமையியல் நீதிபதி, அரசு வழக்குரைஞர் போன்ற பதவிகளுக்கான போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
ஓமலூர் வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள இவ்வகுப்புகள், தினந்தோறும் மாலை நேரத்தில் இரண்டு மணிநேரம் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் மூத்த வழக்குரைஞர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், சிறப்பு வழக்குரைஞர்கள் பலரும் கலந்துகொண்டு பயிற்சி அளிக்க உள்ளனர்.
முதல்நாள் வகுப்பில் சிறப்பு வழக்குரைஞர் தனசேகரன் கலந்துகொண்டு தகவல் தொழில்நுட்ப சட்டங்கள், சைபர் குற்றங்கள், தகவல் தொழில்நுட்பம் மூலம் செய்யப்படும் குற்றங்கள், அந்த குற்றங்களுக்கான தண்டனை சட்டங்கள் குறித்து வகுப்பு எடுத்தார்.
அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பமணி கலந்துகொண்டு போட்டித் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது, அதில் வெற்றிபெறும் வழிமுறைகள் குறித்து பேசினார். இந்த இலவச பயற்சி வகுப்பில் இளம் வழக்குரைஞர்கள் மட்டுமின்றி அனைத்து வழக்குரைஞர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமும், விருப்பமும் உள்ள வழக்குரைஞர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.