குடிநீர் கோரி சாலை மறியல்
இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில் செல்லும் காவிரி குடிநீர் குழாயில் ஏர் வால்வு அமைக்கப்பட்ட இடத்தில் வெளியேறிய தண்ணீரை பிடித்து வந்தனர். அதனையடுத்து, குடிநீர் வீணாகாமல் தடுக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை பகுதியில் காவிரி குடிநீர் குழாய் செல்கிறது. அப்பகுதியில், ஏர் வால்வு அமைக்கப்பட்டுள்ள பகுதியில் வீணாகச் செல்லும் தண்ணீரை பொதுமக்கள் குழாய் அமைத்து பிடித்து வந்தனர். இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தண்ணீர் வீணாக செல்வதைத் தடுக்க, அந்த இடத்தில் பொதுமக்கள் அமைத்த குழாயினை எடுத்து விட்டு சரி செய்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் அப்பகுதியில் தொடர்ந்து தண்ணீர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி இளம்பிள்ளை-காகாபாளையம் செல்லும் பிரதான சாலையில் மறியிலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மகுடஞ்சாவடி போலீஸார், சங்ககிரி வட்டாட்சியர் கே.அருள்குமார் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.