வாழ்க்கையில் தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றியை நோக்கி தமது பயணத்தை திசைதிருப்பவும், பாதகமான மனநிலைகளிலிருந்து மீண்டெழுந்து சாதகமான எண்ணங்களை தமக்குள் வளர்த்துக் கொள்வதற்கும், மனதை தயார்படுத்தும் தேசிய அளவிலான இருநாள் உளவியல் பயிலரங்கம் பெரியார் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை நடத்தும் இப்பயிலரங்கில், நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது, மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவது, திட்டமிட்ட குறிக்கோள்களை அடைவது, தனிநபர் தொடர்பாடலை மேம்படுத்திக்கொள்வது, உடல்மொழியைப் புரிந்து கொள்வது, உணர்வுகளை புரிந்து கொள்வது, மனநல மேம்பாடு போன்ற வாழ்வியல் தேவைகளையும், திறன்களையும் கோட்பாட்டு ரீதியாகவும், செய்முறை அம்சங்களை கொண்டும் பயிற்றுவிக்கும் பயிற்சிகள் வல்லுநர்களால் அளிக்கப்படுகின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தேர்ந்த உளவியல் வல்லுநர்களிடம் பயிற்சி பெற்ற பன்னாட்டு சான்றிதழ் பெற்ற ரங்கநாதன் இப்பயிற்சியை நடத்துகிறார்.
இப்பயிலரங்கில் உளவியல் துறை ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், கல்வியியல் துறை மாணவர்கள் பங்கேற்கின்றனர். இப்பயிலரங்கை பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் தலைமை தாங்கி தொடக்கி வைக்கிறார். இப்பயிலரங்கில் பங்கேற்று பயிற்சிபெறும் பயிற்சியாளர்கள் சமூகத்தில் உளநலத் தேவை உள்ளவர்களுக்கான ஆலோசனைகளை திறம்பட மேற்கொள்வர்.