எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நன்னடத்தை அடிப்படையில் சேலம் மத்திய சிறையில் இருந்து 81 கைதிகள் விடுவிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம் ஜி. ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்துவரும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க அரசு கொள்கை முடிவு எடுத்தது.
அதன்படி, தமிழகத்தில் மத்திய சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்துவரும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் பிப்ரவரி 25 ஆம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இதையடுத்து, அனைத்து மத்திய சிறைகளிலும் நன்னடத்தை கைதிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது,
அந்தவகையில், 60 வயதான கைதிகள் மற்றும் சிறையில் சலூன் கடைகள் மற்றும் துணித் தேய்க்கும் பணியில் ஈடுபட்ட கைதிகள், தச்சுத் தொழிலில் ஈடுபட்டு நன்னடத்தையாக உள்ள கைதிகள், சிறையில் எந்தவித தவறான நடவடிக்கையிலும் ஈடுபடாத கைதிகள் குறித்து அதிகாரிகள் பட்டியல் தயார் செய்தனர்.
இதையடுத்து, பட்டியலில் உள்ள கைதிகள் திருந்தி விட்டனர் என்று உறுதி அளித்ததின் பேரில், தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
மேலும், திட்டமிட்ட கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள், ஆயுதங்கள் பதுக்கல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள், சொத்துத் தகராறில் முன்விரோதம் ஏற்பட்டு கொலை செய்து தண்டனை பெற்றவர்கள், கூலிப்படையினர், நக்சலைட்டுகள், வெடி விபத்து வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் விடுதலை செய்யப்படவில்லை எனவும், நன்னடத்தை அடிப்படையில் சேலம் மத்திய சிறையில் இருந்து 81 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாகவும் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.