சங்ககிரி அருகேயுள்ள சன்னியாசிப்பட்டியில் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.
சங்ககிரி அருகேயுள்ள உத்ரகாந்த மலை, ஐயப்பன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (52). சன்னியாசிப்பட்டி துணை மின் நிலையத்தில் உயர் மின்அழுத்த ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை சன்னியாசிப்பட்டி ஊராட்சி மன்ற கட்டடம் அருகேயுள்ள மின்கம்பத்தில் ஏறி, பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வியாழக்கிழமை அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பசுபதி அளித்த புகாரின்பேரில் சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.